Friday 14 December 2012

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்



கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் - கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

என்று பல ஆண்டுக்ளுக்கு முன்பு சொல்லி விட்டு சென்றார். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு கைதொழில் தெரியும். நாம் பல்வேறு நிருவனங்களில் வேலை பார்க்கலாம். உங்கள் பணியை செய்து கொண்டே ஓரு கைதொழிலை கற்று பகுதி நேரத்தில் வீட்டிலேயே செய்யலாம்.இரண்டாம் உலகப்போரில் பெரும் பாதிப்புக்ள்ளான நாடு ஜப்பான், ஆனால் அதன் கடின உழைப்புக்கு  பிறகு இன்றுவரை உலக அரங்கில் பணக்கார நாடுகள் பட்டியலில் அங்கம் வகித்து கொண்டு இருக்கின்றது என்பதை நாம் நன்கு அறிவோம். இதற்கு காரணம் அவர்களின் தொழில் வளர்ச்சி. எந்த வளமும் இல்லாத அந்த நாட்டில் எப்படி இந்த வளர்ச்சி. ஒவ்வொரு வீட்டிலும் எதாவது ஒரு தொழில் செய்து கொண்டிருப்பார்கள். நம் நாட்டில் இறக்குமதி ஆகும் ஜப்பானிய பொருட்களில் சில (பேனா, மின்னனு பொருள்கள் மற்றும் பல) அவர்கள் வீட்டில் தயாரித்த ஒன்றாக கூட இருக்கலாம்.

ஆனால் எல்லா வளமும் இருக்கின்ற நம் நாட்டில் கைத்தொழில் செய்வோர் மிககுறைவு. சரி.. எதாவது ஒரு தொழிலை செய்துதான் பார்ப்போமே.

கைதொழில் தொடங்க வேண்டுமென்றால் அதற்கு,
அடிப்படை தேவை

1.ஆர்வம்
2.ஆக்கம்
3.முயற்சி
4.பயிற்சி
5.சிறிய முதலீடு

சரி! ஆர்வம் ஆக்கம் இருக்கின்றது... பயிற்சியும் செய்து கொள்வீர்கள்... சிறிய முதலீடும் தயார். இப்போது என்ன கைதொழில் செய்வது என்பது தான் கேள்வி.

இரண்டு வகைகளாக பிரிக்கலாம்...

1. நவீன கால கைத்தொழில்கள்

1. செல்போன் பழுது பார்த்தல்
2. ஸ்கிரீன் பிரிண்ட்டிங்
3. ரப்பர் ஸ்டேம்ப் தயாரித்தல்
4. பேப்பர் கப் தயாரித்தல்
5. மருதானி கோன் தயாரித்தல்
6. எம்ப்ராய்டிங்
7. சணல் பை தயாரித்தல்
8. மிதியடி தயாரித்தல்

2. பாரம்பரிய கைத்தொழில்கள்

1. தென்னை நார் கயிறு தயாரித்தல்
2. மெழுகுவர்த்தி தயாரித்தல்
3. கூடை முடைதல்
4. மண்பாண்டம் செய்தல்
5. கைத்தறி நெசவு
6. கை முருக்கு செய்தல்
7. ஊறுகாய் தயாரிப்பு

மேலே நான் தொகுத்துள்ள தொழில்கள் கொஞ்சம் தான், நமக்கு தெரியாத தொழில்கள் நம்மை சுற்றி, நம் ஊரை சுற்றி, நம் தேசத்தை சுற்றி, நம் உலகத்தை சுற்றி இருக்கின்றன. அவைகளில் நமக்கு பிடித்த ஒரு தொழிலை நன்றாக கற்று கொண்டு செய்யலாமே...














Wednesday 10 October 2012

தானியங்கள்



கம்பு


இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம்.

நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது.

இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.

சோர்வு நீங்க…

மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உன்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

அஜீரணக் கோளாறு நீங்க…

அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும்.
வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

உடல் வலுவடைய….

உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.
* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.
* இதயத்தை வலுவாக்கும்.
* சிறுநீரைப் பெருக்கும்.
* நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
* இரத்தத்தை சுத்தமாக்கும்.
* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.
* நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.
* தாதுவை விருத்தி செய்யும்.
* இளநரையைப் போக்கும்.

அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதானால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

தினை





தினை என்பது ஒரு வகை தானியமாகும். ஆங்கிலத்தில் இது மில்லட் எனும் வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ள தானியமாகும். ஆங்கிலத்தில் மில்லட் என்பது சோளம், கம்பு கேப்பை (கேழ்வரகு) போன்ற தானிய வகையைக் குறிப்பதாகும். இதில் சைனீஸ் மில்லட், ஜெர்மன் மில்லட், ஹங்காரியன் மில்லட், எனும் விதம் விதமான தானியங்கள் அடங்கிய ஒரு வகைப்பாடு ஆகும். இதில் தினை என்பது நரி வாலைப் போல பச்சை நிறத்தில் காட்சியளிப்பதால் இதை ஃபாக்ஸ் டைல் மில்லட் என அழைக்கப்படுகின்றது.

மலை வாழ் மக்களால் பெரிதும் விரும்பப்படக் கூடிய பயிர் வகைகளில் தினை முக்கியமானது. மிகவும் கடினமான வறட்சியைக் கூட தாங்கி வளரக்கூடியது. பலவகையான மண் வகையிலும் நன்கு வளரும் தன்மை உடையது. மண்வளம் குறைவான நிலங்களிலும் கூட தினை வளர்ந்து பலனை அளிக்கிறது. மனித நாகரீகம் தோன்றிய தொடக்க காலத்திலிருந்தே உடல் பலத்தை தரும் முக்கிய உணவாக தினை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தேனும், தினைமாவையும் கலந்து சாப்பிடும் பழக்கம் மலைவாழ் மக்களிடையே காணப்படுகிறது.

தினை உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் இரண்டாவது தானிய வகையாகும். இதில் இந்தியா இரண்டாவது இடத்தையும் சீனா முதலிடத்தையும் வகிக்கின்றன. பழங்காலத்தில் முதலாவதாக பயிரிடப்பட்டு மனிதனால் உபயோகிக்கப்பட்ட தானிய வகை தினை தான். அதுவும் 6000 கி. மு விலேயே சீனாவில் பயிரடப்பட்டு உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது. தற்பொழுதும் சீனாவின் வட மாநிலங்களில் அதிகம் பயிரிடப்பட்டு உபயோகமாகி வரும் தானியம் தினை.

தினை இந்தியாவில் பயிராகும் ஒரு வகை உணவுப் பொருளாகும். தினை மாவு அதிக சத்து கொண்ட உணவுகளில் ஒன்று. இதற்கு இறடி, ஏளல், கங்கு என்ற வேறு பெயர்களும் உண்டு.

தினையை அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

 கேழ்வரகு



குறுதானிய பயிர்களில் முக்கியமானது கேழ்வரகு. தமிழகத்தில் கிராமப்புற மக்களின் உணவில் கேழ்வரகு முக்கிய இடம் வகிக்கின்றது. இதில் உடலுக்கு தேவையான புரதம், மாவுச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள், செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளன. இத்துடன் கேழ்வரகில் மிக அதிக அளவு கால்சியம், பாஸ்பரஸ், பிற நுண்ணூட்ட சத்துக்களும் உள்ளன. இது உடல்பருமன், இதயநோய், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கிறது.


கேழ்வரகில் கால்சியம், இரும்பு சத்து அதிகம் உள்ளன.


பாலில் உள்ள கால்சியத்தை விட இதில் அதிகம் உள்ளன.
கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும்.

நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது.

உடல் சூட்டை தனிக்கும்.

குழந்தைகளுக்கு கேழ்வரகுடன் பால், சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுக்கலாம். இது குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

தினம் கேழ்வரகு கூழ் சாப்பிட்டு வர குடற்புண் குணமடையும்.

மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் இதை சாப்பிட்டு வர குணமடையும்.

கேழ்வரகு சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

கேழ்வரகில் உள்ள நார் சத்துக்கள் மலசிக்கலை தடுக்கிறது.

இது ஜீரணமாகும் நேரம் எடுத்து கொள்வதால், கேழ்வரகு சர்க்கரை

நோயாளிகளுக்கு உகந்த உணவாகும். சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை, அடை, புட்டாக, செய்து சாப்பிடலாம். கூழ் அல்லது கஞ்சியாக சாப்பிடக்கூடாது. இது சிக்கிரம் ஜீரணம் அடைந்து விடும் கூழாக குடிக்கும் போது.

கொலஸ்டிராலை குறைக்கும்.

இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இது இரத்த சோகை நோய் வரமால் தடுக்கிறது.

இதில் அதிக அளவு கால்சியம், இரும்பு சத்து அதிகம் உள்ளன கர்ப்பிணி பெண்கள் தினம் உணவில் சேரத்து கொள்ளலாம்.

குறிப்பு: இதில் ஆக்ஸாலிக் அமிலம் அதிகம் உள்ளதால், சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

சோளம்





நகரமயமாக்கல் சூழலில் மேற்கத்திய கலாச்சர தாக்குதலால் சத்து மிகுந்த உணவு பொருட்கள் பயன்பாடு குறைந்தது. ஆனால் இப்போது உணவு பொருட்கள் மூலம் பெருகி வரும் நோய்களால் பண்டைய உணவு பொருட்களுக்கு ஏங்கி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. சமீபகாலமாக கம்பு, ராகி போன்ற தமிழர்களின் பண்டைய சிறு தானியங்களை வாங்கி வைத்து பயன்படுத்துவது நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகிறது.

சிறுதானியங்களில் பல வகைகள் இருந்தாலும் சோளம் முதன்மையான உணவு பொருளாக கருதப்படுகிறது. சோள உற்பத்தியில் இந்தியா 3 வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஆந்திரபிரதேசம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சோளம் பயிரிடப்படுகிறது. சோளத்தில் ரொட்டி, கஞ்சி, கூழ், சாதம் போன்றவை மட்டும் தயாரிக்கப்பட்டு வந்த நிலை மாறி தற்போது, இட்லி, தோசை, ஊத்தாப்பம், பணியாரம், ரொட்டி, பரோட்டா, அப்பம், அடை, உப்புமா, கேசரி, வடகம், முறுக்கு, பிஸ்கட், சோள பொரி லட்டு, சேமியா, கொழுக்கட்டை மிக்ஸ் , பணியார மிக்ஸ், சமோசா மிக்ஸ் உள்ளிட்ட பல உணவு வகைகள் சோளத்தில் தயாரித்து பயன்படுத்தலாம்.

தற்போது சோள தானியங்களுக்கு நகர்ப்புறங்களில் அதிக கிராக்கி ஏற்பட்டு வருகிறது. மழை வளம் குறைந்து வரும் சூழலில், குறைந்த நீர் தேவையுள்ள சோளப்பயிர்களை விவசாயிகள் உற்பத்தி செய்வது மூலம் நல்ல லாபத்தையும் ஈட்ட முடியும். சோளத்தில் அதிகளவு மாவுசத்து, நார்சத்தும் அடங்கியுள்ளதால் இது ஒரு சக்தி தரும் உணவாக திகழ்கிறது. குலூட்டான் எனும் வேதிப்பொருள் சோளத்தில் இல்லாத காரணத்தால் கோதுமை ஒவ்வாமை உள்ளவர்களும் சோளத்தை சாப்பிடலாம்.

கோதுமையில் உள்ள புரோட்டீனை விட சோளத்தில் உள்ள புரோட்டீன் சிறப்பு வாய்ந்தது. பட்டை தீட்டப்படாத சோளத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால் இது மலச்சிக்கலுக்கு ஏற்ற உணவாகவும் உள்ளது. சர்க்கரையைக் குறைக்கும் தன்மை கொண்டதால் இன்சுலின் சாரா சர்க்கரை நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாகும்.

இட்லி, தோசை, ஊத்தாப்பம், பணியாரம், ரொட்டி, பரோட்டா, அப்பம், அடை, உப்புமா, கேசரி, வடகம், முறுக்கு, பிஸ்கட், சோள பொரி லட்டு, சேமியா, கொழுக்கட்டை மிக்ஸ், பணியார மிக்ஸ், சமோசா மிக்ஸ் உள்ளிட்ட பல உணவு வகைகள் சோளத்தில் தயாரித்து பயன்படுத்தலாம்.




Friday 5 October 2012

நம் வீட்டில் மூலிகை வளர்ப்பு


நம் வீட்டில் மூலிகை வளர்ப்பு

நமக்கு தெரிந்த மூலிகைகள் நாம் அறிந்தும் அதன் மகத்துவதை அறியாமல் இருக்கிறோம் இவற்றை பயன்படுத்தினாலே பல நோய்கள்லிருந்து விடுபெறலாம். அவற்றை இந்த பகுதியில் தொகுத்துள்ளேன்.

1.துளசி


துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும். ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் ஆன்டிபயாட்டிக்குகள் நல்லதல்ல.


1) வேறு பெயர்கள்: துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா.

2) இனங்கள்: நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்)

3) தாவரப்பெயர்கள்: Ocimum, புனித, LINN Lamiaceae, Labiatae (குடும்பம்)

4) வளரும் தன்மை: வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண், பாட்டு நிலம் தேவை. கற்பூரமணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும் உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. துளசியின் தாயகம் இந்தியா. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கும் பரவியுள்ளது. துளசியை விதை மற்றும் இளம் தண்டுக் குச்சிகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். மண்ணில் கார அமில நிலை 6.5 - 7.5 வரை இருக்கலாம். வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிரிகி.

5) பயன் தரும் பாகங்கள்: இலை, தண்டு, பூ, வேர் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை.

6) பயன்கள்: தெய்வீக மூலிகையும், கல்ப மூலிகையும் ஆகும். வீட்டு உபயோகம், மருந்து, வாசமுடைய பூச்சி மருந்துகள், வாசனைப் பொருட்கள். துளசியின் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப்பிடலாம். இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி, கிருமி நாசினி, பல்வேறு வியாதிகளையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது. துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது. வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு. இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி.

இலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்து சாறு 5 மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வர பசியை அதிகரிக்கும். இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும். சளியை அகற்றும், தாய்பாலை மிகுக்கும். இலை கதிர்களுடன் வாட்டி பிழிந்த சாறு காலை மாலை 2 துளி வீதம் காதில் விட்டு வர 10 நாட்களில் காது மந்தம் தீரும். விதைச் சூரணம் 5 அரிசி எடை தாம்பூலத்துடன் கொள்ள தாது கட்டும். மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது. தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலைக் கசாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும். வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.

துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது. எளிமையான கருத்தடைச் சாதனமாகக் கொள்ளவும் ஏற்றது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு ஆண், பெண் இருவரும் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது.

குணமாகும் வியாதிகள்.

1. உண்ட விஷத்தை முறிக்க.
2. விஷஜுரம்குணமாக.
3. ஜன்னிவாத ஜுரம் குணமாக.
4. வயிற்றுப்போக்குடன் இரத்தம் போவது நிற்க.
5. காது குத்துவலி குணமாக.
6. காது வலி குணமாக.
7. தலைசுற்றுகுணமாக.
8. பிரசவ வலி குறைய.
9. அம்மை அதிகரிக்காதிருக்க.
10. மூத்திரத் துவாரவலி குணமாக.
11. வண்டுகடி குணமாக.
12. வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி, வயிற்று உப்பிசம் குணமாக.
13. எந்த வியாதியும் உண்டாகமலிருக்க.
14. தோல் சம்பந்தமான நோய் குணமாக.
15. மின்சாரம் தாக்கியவரைக் காப்பாற்ற.
16. அஜீரணம் குணமாக.
17. கெட்டரத்தம் சுத்தமாக.
18. குஷ்ட நோய் குணமாக.
19. குளிர் காச்சல் குணமாக.
20. மூக்கு சம்பந்தமான வியாதிகள் குணமாக.


2.கற்பூறவல்லி




கற்பூரவள்ளி ஒரு சிறந்த கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூர வள்ளியும் நட்டு வளர்த்தனர். இரண்டும் விஷக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது.

கற்பூரவள்ளியை தென்னை மரத்தைச் சுற்றி நட்டு வைத்தால் எந்தவகை யான பூச்சிகளும் தென்னையைத் தாக்காது.
கற்ப மூலிகையில் கற்பூரவள்ளிக்கு சிறந்த இடமுண்டு.
இதனால்தான் இதன் பெயரும் கூட கற்பூர வள்ளி என்று அழைக்கப்படுகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற மருந்தாக கற்பூரவள்ளி அமைகிறது.

இந்தியாவில் தமிழகம் கேரளா, கர்நாடகா பகுதிகளில் அதிகம் காணப் படுகிறது. இதன் இலை வட்ட வடிவமாக பஞ்சு போன்று காணப்படும். இதில் காரத்தன்மை கொண்ட நீர்ச்சத்து நிறைந்துள்ளது.

கற்பூரவள்ளி இலைகளை காயவைத்து பொடி செய்து அதனுடன் காய்ந்த தூதுவளை, துளசி பொடிகளை சம அளவு எடுத்து புட்டியில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் காலை வேளையில் குழந்தைகளுக்கு 1 சிறு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல், ஈளை போன்றவை நீங்கும். சளியின் அபகாரம் குறையும்.

கற்பூர வள்ளி இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் காய்ந்த வேப்பிலை, வில்வம், அத்தி இலை, துளசி இலை, தும்பை இலை, தூதுவளை, ஆடாதோடை, நெல்லி, கீழாநெல்லி இவற்றை சம அளவு எடுத்து அதனுடன் சுக்கு, மிளகு, மஞ்சள்தூள், தனியா பொடி கலந்து ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளையும் வேளைக்கு இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து நீரில் கொதிக்க வைத்து அருந்தி வரவேண்டும்.
இவ்வாறு அருந்தி வந்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
மூச்சுக் கிளைக்குழல்களில் தொற்றுநோய்களின் தாக்குதல் ஏதுமின்றி பாதுகாக்கும். சுருங்கியுள்ள மூச்சுக்குழல்களை விரிவடையச் செய்து சீராக செயல்பட வைக்கும். ஆஸ்துமாவுக்கு இது நல்ல மருந்து.

குழந்தைகளுக்கு உண்டான மார்புச்சளி நீங்க சிறு குழந்தைகளுக்கு மார்பில் சளி கட்டிக்கொண்டு இறுகிப்போயிருக்கும். இதனால், குழந்தைகளுக்கு அடிக்கடி மூச்சு விட முடியாமல் திணறுவார்கள். சில சமயங்களில் இது ஆஸ்துமா, காசநோயாக கூட மாற நேரிடும். இவர்களுக்கு கற்பூர வள்ளி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து, லேசாக வதக்கி சாறு எடுத்து, 5 மி.கி. அளவு தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால், மார்புச்சளி அறவே நீங்கும்.

கற்பூரவள்ளி இலை, தூதுவளை, வல்லாரை, இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி அதில் 1 ஸ்பூன் அளவு எடுத்து 100 மி. லி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து 50 மி. லியாக சுண்டக் காய்ச்சி, அதனுடன் சிறிது பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், நுரையீரல் பாதிப்பு நீங்கும். மூச்சுக்குழல் அடைப்பு சீராகும்.

கற்பூரவள்ளி சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் மூக்கில் நீர்வடிதல், சளி, இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைக் கம்மல் குணமாகும்.

கற்பூரவள்ளி உடலை நோயின்றி காப்பது போல், வீட்டையும் விஷப் பூச்சிகளிலிருந்து காப்பாற்றும்.


3.தூதுவளை


தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.


தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து பயன்படுத்தினால், மேற்கண்ட நோய்கள் குணமாகும். இப்படி தயாரித்த துவையலை சாப்பிடும்போது காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலனை உடனே காண முடியும். இவ்வாறு வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது. தூதுவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.

தூதுவிளங்காயைச் சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும். நுரையீரல் வலுவடையும்.

தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும். இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.

பசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். இப்பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.

தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் செய்யான் கடி விஷம் தீரும்.

தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும்.

ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும்.

தூதுவளை இலைச்சாறு 100 மில்லி, பசு நெய் 30 மில்லி, இரண்டையும் சேர்த்து தூள் செய்த கோஸ்டம் 5 கிராம் சேர்த்து பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொண்டு, இதில் ஒரு தேக்கரண்டியளவு, தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சாதாரண இருமல் முதல் கக்குவான் இருமல் வரை குணமாகும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம், பத்தியமில்லை.

தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.

புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.

சித்த வைத்திய முறையில் தயாரிக்கப்படும் தூதுவளை நெய் பல நோய்களுக்கு நிவாரணமளிக்கிறது. தூதுவளை நெய்யை 1 முதல் இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டால், எலும்புருக்கி நோய்கள், ஈளை இருமல், கபநோய்கள், மேக நோய்கள், வெப்பு நோய்கள், இரைப்பு, இளைப்பு இருமல் நோய்கள், வாய்வு, குண்டல வாயு முதலியன தீரும்.

தூதுவளையை மிக எளிய முறை உபயோகத்திலேயே பல நன்மைகளை அடைய முடியும்.

இதே போல தூது விளங்காயையும் சமைத்துச் சாப்பிட்டால், கப ரோகம் தீரும். பித்தவாயு இவைகள் நிவர்த்தியாகும்.


4.நொச்சி




மூக்கிலிருந்து நீர் ஒழுகுதல், ஜலதோஷத் தலைவலிக்கு கைகண்ட மருந்து நொச்சி தைலம். நொச்சித் தைலம் பல நோய்களைத் தீர்க்கும் நிவாரணியும் கூட.

மேலும் நொச்சி இலையில் ஒத்தடம் கொடுத்தால் வாயுப்பிடிப்பு, சுளுக்கு நீங்கும். இதன் இலையைச் சட்டியில் போட்டு பிறகு அடுப்பில் சூடு செய்து உடம்பு ஏற்கும் அளவு சூட்டில் ஒத்தடம் கொடுத்தால் வலி நீங்கும். வலியுள்ள இடத்தில் துவையலாக அரைத்தும் பூசலாம். மண்ணீரல் வீக்கமும் கட்டுப்படும்.

நொச்சி இலைகளை ஒரு துணிப்பையில் அடைத்துப் தலையணையாகப் பயன்படுத்தினால் ஜலதோஷம் பறந்துவிடும். உலர்ந்த நொச்சி இலையைத் தூள் செய்து பீடிப்புகை பிடித்தாலும் ஜலதோஷம் நீங்கும். இதனுடைய சாறு வயிற்றுப் புண்ணையும் ஆற்றும். இலைச்சாற்றை தலைப்பகுதியிலும், கழுத்திலும் தேய்த்து, சிலமணி நேரம் உடலில் ஊறவிட்டு இளஞ்சூட்டு வெந்நீரில் குளித்தால் கழுத்துவலி நீங்கி, காதில் தங்கிய நீரும் வெளியேறும்.

சீழ்பிடித்து அழுகிச் சொட்டும் புண்ணைக் கூட நொச்சி தைலத்தால் குணப்படுத்தலாம். நொச்சி இலையுடன் திப்பிலி சேர்ந்த கஷாயம் ஜலதோஷக் காய்ச்சலுக்கு நல்லது. கேளாச் செவியையும் கேட்க வைக்கும்.

பிரசவத்துக்கு முன்னும் பின்னும் கர்ப்பப்பையில் ஏற்படும் வலி குறைய நொச்சி இலை போட்டு ஊற வைத்த தண்ணீரைச் சூடுபடுத்தி, உடம்பில் ஊற்ற வேண்டும்.

தீராத வாதநோய் வலிப்பு குணமாக நொச்சி இலையுடன் பூண்டு, ரோஜா மொட்டு அல்லது காசினி விதைப்பூ சேர்த்த அரிசிக்கஞ்சியை குடிக்கலாம். மிளகு, நெய் இரண்டும் சேர்த்து நொச்சிக் கொழுந்தை அரைத்து வழித்த சாரும் 2 தோலாவுடன் (1 தோலா என்பது 12 கிராம்) 2 தோலா அளவு குடித்தால் ஈரல் வீக்கம் கட்டுப்படும்.

நொச்சி வேர்ப்பட்டையின் சாரத்தை புண்ணுக்கு டிஞ்சராகத் தடவலாம். நொச்சி வேர்ப்பொடி மூலத்துக்கும், சீதபேதிக்கும் மருந்தாக பயன்படுகிறது. நொச்சிவேர் நாள்பட்ட புண், குடல்புண், வயிற்றுப் புழு, தொந்தரவுக்கு கிருமி நாசினியாகும். உலர்ந்த நொச்சிப் பூக்களைத் தூள் செய்து சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு, காய்ச்சல் குணமாகும். நொச்சிப் இலையும், பட்டையும் தேள்கடிக்கு நல்ல மருந்து.


5.ஆடாதொடை



ஆடாதொடை தமிழக்ம் முழுவதும் காணப்படும் ஒரு குறுஞ்செடியினம். நீண்ட ஈட்டி வடிவ இலைகளையும், வெள்ளை நிறப்பூக்களையும் உடைய செடி. சளி, இருமல், வயிற்றுபூச்சிகளை போக்குவதில் அருமருந்து இது.


1. இலைச்சாற்றை சில துளிகள் தேனுடன் கலந்து சாப்பிட்டு வர இரத்தவாந்தி, மூச்சுத்திணறல், இரத்தம் கலந்த சளி குணமாகும்.

2. இலைச்சாற்றை எருமைப்பாலுடன் காலை மாலை சாப்பிட்டு வர சீதபேதி, இரத்தபேதி குணமாகும்.

3. இதன் 10 இலைகள் எடுத்து நீரில் போட்டு காய்ச்சி தேனுடன் கலந்து 40 நாட்கள் காலை, மாலை சாப்பிட்டு வர என்புருக்கி, சளிசுரம், விலாவலி ஆகியன குணமாகும்
.
4. ஆடாதொடை வேருடன், கண்டங்கத்திரி வேர் கலந்து இடித்து அதில் 1 கிராம் வீதம் தினமும் தேனில் கலந்து சாப்பிட்டு வர நரம்பு தீரும்.

5, இதன் உலர்ந்த இலைகளை ஊமத்தை இலையில் சுருட்டி புகைபிடிக்க மூச்சுத்திணறல் தீரும்.

6, இதனுடன் கலந்து செய்யப்படும் ஆடாதொடை மணப்பாகு ஆகியவை குணமாகும். குரல் இனிமை கிடைக்கும். ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படும் கஷாயம் அனைத்து சுரங்களுக்கும் குணமளிக்கக் கூடியது.

8. கருவுற்ற பெண்கள் இதன் வேரில் கஷாயம் வைத்து கடைசி மாதத்தில் அருந்தி வர சுகப்பிரசவம் உண்டாகும்.


6.கீழாநெல்லி



தமிழ் நாட்டில் அநேகருக்கு தெரிந்த மூலிகை கீழாநெல்லியாகத்தான் இருக்கும். மஞ்சள்காமாலைக்கு கீழாநெல்லி என்று பலரும் இலவச வைத்திய முறை மஞ்சள் காமாலை என்று கேள்விப்பட்டதும் கூறுவார்கள். ஆனால் அணுபான முறை அநேகருக்கு சரிவரத் தெரியாது. கீழாநெல்லி மஞ்சள் காமாலை, மூத்திர நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, வயிற் றோட்டம், முறைசுரம், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், தீராத அழுகல் புண்கள், புரைகள், வீக்கம், குருதிவடிதல் போன்ற நோய்களுக்கான மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றது.   நமது சித்தர்கள் தமது சித்தத்தை அடக்கி, ஞானத்தை பெருக்கி உடம்பை வளர்த்து உயிரை வளர்க்கும் உபாயத்தை நமக்கு அன்புடன் விட்டுசென்றுள்ளனர். ஆனால் நாம் ஆங்கிலேயரின் ஆட்ச்சியில் இருந்தபோது இததகைய பாரம்பரிய உயர் மருத்துவ முறைகளை உதாசீனப்படுத்திவிட்டோம். அவைகளை தொகுத்து வைக்க மறந்து விட்டோன். பலாயிரக்கனக்கான ஒல்லை சுவடிகள் படிஎடுக்கப்படாமல் ஆடிப்பெருக்கில் ஆற்றினில் விடப்பட்டது .. சித்த மருத்துவம் என்றாலே நம் நினைவுக்கு வருவது மூலிகைகள்தான். மூலிகைகள் இன்றி சித்த மருத்துவம் இல்லை என்றே கூறலாம். ஒவ்வரு உள்ளுருப்பையும் பாதுகாக்க ஒவ்வரு மூலிகைகைகளை நமது சித்தர்கள் நமக்கு காட்டிச்சென்றுள்ளனர். சிறுநீரகத்தைக் காக்கும். சிறுநீரகத்துக்கு ஏற்ற சிறுபீளை,, நெருஞ்சில், அதியமான் நெடுநாள் வாழ ஒளவை வழங்கிய ஆயுள் காக்கும் நெல்லி மற்றும் அதன் வகைகள், ஆண்மைக் குறைவைப் போக்கும் பூனைக்காலி, கருப்பைக் கோளாறுகளைத் தீர்க்கப் பயன்படும் அசோக மரம், புற்று நோயைப் புறக்கணிக்க உதவும் கொடிவேலியும், நித்திய கல்யாணியும், இதயத்திற்கு செம்பருத்தி மூளைக்கு வல்லாரை என இவ்வாறு வகைப்படுத்தி உள்ளனர். இதில் முக்கிய உறுப்பான கல்லீரலுக்கு கீழாநெல்லிதான் காக்கும் நண்பன். மிகக் கொடிய நோய்களுக்கான மருந்துகள் சித்த மருத்துவத்தில்இருந்தாலும்கூட, முதலில் வேர் பாரு, தழை பாரு மிஞ்சினா மெல்ல மெல்ல பற்பஞ் செந்தூரம் பாரு 'என்பது சித்தர்களின் வழி. இலைகளில் இருக்கும் வைத்திய முறைகள், நோய்களை வராமல் தடுக்கும் இயற்க்கை முறை. உணவிலேயே சரிப்படுத்த நாம் எடுக்கும் முதல் வழி.   இதன் வேறுபெயர்கள் -: கீழ்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி காட்டு நெல்லிக்காய், பூமியாமலக், பூளியாபாலி..   இது ஒரு குறுஞ் செடி, இரண்டு அடிவரை வளரும். மாற்றடுக்கில் இரு சீராய் அமைந்தசிறு இலைகளை உடையது. இலைக் கொத்தின் அடிப்புறத்தில் கீழ் நோக்கிய காய்கள் இருக்கும். கீழா நெல்லி என அதானால் தன பெயர் வந்தது போலும். கீழா நெல்லி தான் என்பதறுகு, காய்கள் கீழ்நோக்கி அடிப்புரத்தில் இருக்கினவா என ஊர்ஜிதப்படுத்திய பின்னர் தான் இதனைப் பயன் படுத்த வேண்டும்.  செடி முழுதும், தண்டு, வேர், மற்றும் இலைகள். அனைத்தும் பயன் தரும்  மஞ்சக்காமாலை, மேகம், கண்நோய், பித்தநோய் சிறுநீர் பெருக்கியாகவும், தீராத தலைவலி, கல்லீரல் பழுது, இரத்த சோகை இவைகளுக்கு மருந்தாகும். கீழாநெல்லி செடி 4 ஏலக்காய் அரிசி, கறிமஞ்சள் தூள் இவை வகைக்கு ஒரு காசு எடை சேர்த்து ஈரவெங்காயம் ஒன்று சேர்த்து பசுவின் பால் விட்டரைத்து அரைத்த அதை பால் மோர் ஏதேனும் ஒரு அனுபானத்தில் கலக்கி காலை மாலை கொடுக்க காமாலை நிச்சயம் குணமாகும். இத்க்து ஒரு அனுபவ வைத்தியம்.   கீழாநெல்லி தைலமாகவும் செய்து பயன்ப்படுத்தப் படுகிறது. நல்லெண்ணைய் இரண்டு ஆழாக்கு கீழாநெல்லிவேர், கருஞ்சீரகம், நற்சீரகம் இவை வகைக்குகால் பலம் (9 கிராம்) பசும்பால் விட்டு அரைத்து கலக்கிக் கொதிக்கவைத்து வடித்து தலை முழுகி வரலாம் நெல்லி சமூலம் 30 கிராம் 4 மிளகுடன் சிதைத்து 2 குவளை நீரில் பொட்டு ஒரு குவளையாகக்காச்சி மூன்று வேளையாகக் குடித்து வர சூடு, சுரம், தேக எரிச்சல் தீரும்.
இலையில் உப்பு சேர்த்து அரைத்துத் தடவிக்குளிக்கச் சொறி சிரங்கு, நமச்சல் தீரும்.
கீழாநெல்லி அரைத்து இத்துடன் வில்வ இலைச்சாறு கறிப்பான் இலைக்சாறு, நாயுருவி வேருடன் பிடுங்கி அதனை இடித்து இவற்றை எல்லாம் சேர்த்து வடிகட்டி ஒரு நாளைக்கு 2 வேளை தொடர்ந்து 40 நாட்கள் கொடுத்து வர தீராத மஞ்சள் காமாலை நோய் தீரும்.
நன்கு வளர்ந்த கீழாநெல்லி செடியின் இலையை நன்கு அரைத்து, சுத்தமான வெள்ளாட்டுப் பாலில் கலந்து, பத்து முதல் பதினைந்து நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை பறந்தே போய்விடும்.   பொதுவாக கல்லீரலுக்கும் கண்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆகையினால் கல்லீரல் நோய் வராமல் பாதுகாக்க வேண்டும். அதற்கு கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி கீரையைத் தினமும் சாப்பிட வேண்டும். தினமும் 200 கிராம் திராட்சை சாப்பிட்டு வரலாம். பொதுவாக இரவு படுக்கப் போகும் முன்பு, இரு கண்களையும் குளிர் நீரால் கழுவி, சுத்தப்படுத்திக் கொள்வதன் மூலம் கண்களுக்குக் குளிர்ச்சியும், ஒருவித புத்துணர்ச்சியும் கிடைத்து, கண்களின் உட்புறத்திலுள்ள நரம்புகளுக்குச் சக்தி கிடைத்து தூய்மைப்படுத்தி கண்களைப் பாதுகாக்கிறது. நெல்லி சமூலம் 30 கிராம் 4 மிளகுடன் சேர்த்து 2 குவளை நீரில் பொட்டு ஒரு குவளையாகக்காச்சி மூன்று வேளையாகக் குடித்து வர சூடு, சுரம், தேக எரிச்சல் தீரும்.
நன்கு வளர்ந்த கீழாநெல்லி செடியின் இலையை நன்கு அரைத்து, சுத்தமான வெள்ளாட்டுப் பாலில் கலந்து, பத்து முதல் பதினைந்து நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை பறந்தே போய்விடும். இதன் இலைச் சாறு பொன்னாங்கண்ணி சாறு சமன் கலந்து நல்லெண்ணையுடன் கலந்து காச்சி தலை முழுக பார்வை கோளாறு தீரும். கிழா நெல்லியை வாரம் ஒரு முறையாவது உபயோகித்து வர கல்லிரல் வலுவாக இருக்கும். கல்லிரளுக்கு, அதிக வேலைகளை உள்ளன. இதயமும், கல்லிரலும் ஒன்றுதான் இருக்கிறது எனவே அவைகளை கவனமுடன் வருமுன் காப்பது மிக அவசியம்.

7.பிர்ண்டை



பொதுவாக பிரண்டை வெப்பமான இடங்களில் வளர்கிறது. கொடிவகையைச் சார்ந்தது. இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது. சதைப்பற்றான நாற்கோண வடிவத்தண்டுகளையுடைய ஏறு கொடி, பற்றுக்கம்பிகளும் மடலான இலைகளும் கொண்டிருக்கும் சாறு உடலில் பட்டால் நமச்சல் ஏற்படும் சிவப்பு நிற உருண்டையான சிறியசதைக் கனியுடையது விதை. கொடி மூலம் இனப்பெருக்கம் செய்யப்படிறது, இதில் ஆண் பிரண்டை, பெண் பிரண்டை எனஇரு வகைப்படும். பெண் பிரண்டையின்கணு 1 முதல் 1 1 \ 2 அங்குலமும் ஆண்பிரண்டையின் கணுவு 2 முதல் 3 அங்குலமும் இருக்கும். இலைகள் முக்கோண வடிவில் முள் இல்லாமல் பெரிதாக இருக்கும். காரத்தன்மையும், எரிப்புக் குணமும் கொண்டது.

இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த குணமுடையது.

பிரண்டையை உலர்த்தி எடுத்துச் சாம்பலாக்க வேண்டும். ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் நீரில் கரைத்து வடிகட்டி அரை நாள் தெளிய வைக்க வேண்டும் தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 8 -10 நாள் வெய்யலில் காயவைக்கவும் நீர் முழுதும் சுண்டி உலர்ந்தபின் படிந்திருக்கும் உப்பினை சேர்த்து வைக்கவும்.

குழந்தைகளுக்கு வரும் வாந்திபேதிக்கு ஒரு கிராம் அளவு பாலில் இந்த உப்பைக் கரைத்து மூன்று வேளை கொடுக்க குழந்தை வாந்தி பேதி குணமாகும். செரியாமை குணமடையும். பெரியவர்களுக்கு 2 -3 கிராம் வடித்த கஞ்சியில், மோரில் கொடுக்கவும்.

வாய்ப்புண், வாய் நாற்றம், உதடு, நா வெடிப்பு ஆகியவற்றிக்கு 2 கிராம் வெண்ணெயில் இரு வேழை மூன்று நாள் கொடுக்க கணமாகும்.

தீராத வயிற்றுப்புண், வயிற்று வலி ஆகியவற்றிக்கு இதன் உப்பை 48 - 96 நாள் இரு வேளை சாப்பிட குணமாகும். நவ மூலமும், சீழ்ரத்தம் வருதல், அரிப்பு, கடுப்பு, ஆசனவாயில் எரிச்சல் இருந்தாலும் இந்த உப்பை 3 கிராம் அளவு வேளை கொடுக்க குணமாகும்.

300 கிராம் பிரண்டை 100 கிராம் உப்புடன் ஆட்டி அடைதட்டிமண் குடுவையில் வைத்துச் சீலைமண் செய்துபுடம் போட்டு எடுக்க சாம்பல் பற்பமாகமாறி இருக்கும் உப்பைப் போலவே எல்லா நோய்களுக்கும் இந்த பஸ்பத்தைக் கொடுக்கலாம்.

பிரண்டை உப்பை 2 - 3 கிராம் பாலில் கொடுத்துவர இரு திங்களில் உடல் பருமன் குறைந்து விடும். ஊளைச் சதைகளையும் குறைக்கும்.
இந்த உப்பை தென்னங்கள்ளில் கொடுத்துவர ஆஸ்துமா, எலும்புருக்கி, மதுமேகம், நீரிழிவு குணமடையும்.

மூன்று வேளை 2 கிராம் நெய்யில் கொடுக்க சூதகவலி குணமடையும்.
பிரண்டை உப்பை 2 கிராம் அளவு ஜாதிக்காய்த் தூள் 5 கிராமுடன் கலந்து சாப்பிட்டு வர தாது நட்டம் குணமடையும். வீரியம் பெருகும், உடம்பு வன்மை பெரும்.

பிரண்டை இலையையும், தண்டையும் உலர்த்தி, இடுத்து சூரணம் செய்து கொண்டு அதனோடு சுக்குத்தூள், மிளகுத்தூள் சமஅளவாக எடுத்துக்கொண்டு உள்ளுக்குக் கொடுத்துவர செரியாமை தீரும். இதனை கற்கண்டுகலந்த பாலுடன் உட்கொண்டுவரு உடலுக்கு வன்மை தரும்.

நெய்விட்டு பிரண்டைத்தண்டை வறுத்து துவையலாக அரைத்து உண்டு வர வயிற்றுப் பொருமல் சிறு குடல் பெருகுடல் புண் நீக்கி நல்ல பசிஉண்டாகும்.

பிரண்டைத் தண்டை நெய்விட்டு வறுத்து அரைத்து கொட்டைப பாக்களவு வீதம் தினம் இரு வேளையாக எட்டு நாட்கள்உட் கொண்டு வந்தால் மூல நோயில்உண்டாகும் நமச்சலும், குருதி வடிதலும் நிற்கும்.

பிரண்டையை தீயில் வதக்கி சாறு பிழிந்து தகுந்த அளவில் உள்ளுக்குக் கொடுத்து வர பெண்களுக்கு உண்டாகும் மாதவிலக்கு கோளாறுகள் நீங்கும்.

பிரண்டை, பேரிலந்தை, வேப்ப ஈர்க்கு, முருங்கன் விதை, ஓமம் இவைகளை சமளவு எடுத்து கஷாயமிட்டு அருந்தி வர, வயிற்றில் உள்ள வாயு நீக்கி வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறி நல்ல பேதி ஏற்படும்.

முறிந்த எலும்பு விரைவில் சேர்வதற்கு இதன்வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் வீதம் உண்டு வரலாம் இதனை வெந்நீரில் குழைத்து பற்றிட்டும் வரலாம்.

பிரண்டைத் தண்டை எடுத்து சுண்ணாம்பு தெளி நீரில் ஊரவைத்து வேளைக்கு ஒன்றாக உட்கொண்டு வந்தால் நல்ல பசி ஏற்படும்.

பிரண்டையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் புளியையும் உப்பையும் கூட்டிக்காச்சி, குழம்பு பதத்தில் இறக்கி பற்றிட்டு வந்தால் சுளுக்கு, கீழே விழுந்து அடிபடுதல், சதை பிரளுதல், வீக்கங்கள் குணமடைந்து நல்ல பலன் கிடைக்கும்.

மருத்துவ மூலிகை

இலைகளும், இளம் தண்டுத் தொகுதியும் உடல்நலம் தேற்றுபவை. வயிற்றுவலி போக்க வல்லது. இதன் பொடி ஜீராணகோளாறுகளுக்கு மருந்தாகிறது. தண்டின் சாறு எலும்பு முறிவுகளில் பயன்படுகிறது. ஒழுங்காக மாதவிடாய் வராத கோளறு, ஆஸ்துமா, ஆகியவற்றை தீர்க்கும். வேரின் பொடி எலும்பு முறிவில் கட்டுப்போட உதவுகிறது.

மெலிந்த உடல் குண்டாக

ஒரு சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். இவர்கள்
பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும்.

வயிற்றுப் பொருமலால்அவதியுறுபவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கி, வாயுத் தொல்லை மட்டுப்படும். மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.

பிரண்டை துவையல்

எலும்புசந்திப்புகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுக்களின் சீற்றத்தால்
தேவையற்ற நீர் தேங்கிவிடும். அவர்கள் முதுகு மற்றும் கழுத்து வலியால்
அவதிப்படுவார்கள். இந்த நீரானது முதுகுத் தண்டு வழியாக இறங்கி சளியாக மாறி பின் பசைபோல் முதுகு, கழுத்துப் பகுதியில் இறுகி முறுக்கிக்கொள்ளச்
செய்யும். இதனால்தான் இவர்களால் தலையை திருப்பவோ, அசைக்கவோ, குனியவோ முடியாமல் அவஸ்தைப்படுவார்கள். இத்தகைய பாதிப்பிலிருந்து விடுபட சித்தர்கள் பிரண்டை உப்பு, பிரண்டை கற்பக மருந்து போன்றவற்றைக் கொடுத்து சிகிச்சை செய்துள்ளனர்.

இளம் பிரண்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன்
சிறிது வெந்நீர் கலந்து பசைபோல் தயாரித்து கழுத்து, முதுகு இடுப்புப்
பகுதியில் பற்றுப்போட்டு வந்தால் முறுக்கிய பகுதிகள் இளகி முதுகு வலி,
கழுத்துவலி குணமாகும். பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் இந்த நோயிலிருந்து விடுபடலாம்.

மன அழுத்தம் அல்லது வாயு சம்பந்தப்பட்டநோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத்துவையல் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறை நீக்கும்.

மூலநோயால்அவதிப்படுபவர்களின் மூலப் பகுதி அதிக அரிப்பை உண்டாக்கி புண்ணை ஏற்படுத்தும். இதனால் மலத்தோடு இரத்தமும் கசிந்துவரும். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை என இருவேளையும், 1 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் மாறி, மூல நோயால் ஏற்பட்ட புண்கள் விரைவில் குணமாகும்.

ரத்த ஓட்டம் சீராகும்

உடலில்கொழுப்புச் சத்துக்கள் நிறைந்துள்ளவர்களுக்கு இரத்தக் குழாய்களில்
கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால்
இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடுகிறது. இதனால் இதய வால்வுகள் பாதிப்படைகின்றன. பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கு பிரண்டை சிறந்த மருந்தாகும். பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும்.

எலும்பு முறிவு ஏற்பட்டால், பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின் மீது கட்டியும், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டும் வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். உடைந்த எலும்புகள் விரைவில் இணைந்து எலும்புகள் பலம்பெறும். கள்ளிச் செடியின்மீது படர்ந்திருக்கும் பிரண்டையை தவிர்ப்பது நல்லது.


8.நெல்லி
இந்தியாவில் எங்கும் காணக்கிடைக்கும். 800 மீட்டர் உயரம் வரை மலைகளில் நன்றாக விளையும். மற்ற நிலங்களில் சுமாராகவிளையும். தென்னிந்தியாவில் அதிகமாகக்கிடைக்கும். இலையுதிர் மர வகையைச் சேர்ந்தது. இலைகள் நீண்டிருக்கும், அகலம் குறைவானது. இளம் மஞ்சள் நிறக்காயகளையும் உடைய மரம். காய் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவைகள் ஒருங்கே பெற்றுள்ளது.

இலையடி செதில் மிகச்சிறியதாக நீண்டு இருக்கும். பூக்கள் இலைக்கோணங்களில் கொத்தாக இருக்கும். ஆண் பூக்களும் பெண்பூக்களும் கலந்து இருக்கும். இலைகளில் மேல் பகுதியில் இருப்பவை ஆண் பூக்களாகவும் கீழ்பகுதியில் உள்ளவை பெண் பூக்களாகவும் இருக்கும். பெண் பூக்களின் எண்ணிக்கை ஆண் பூக்களின்எண்ணிக்கையைவிடக் குறைவு. பூ விதழ்கள் ஆறு. தலைகீழ் ஈட்டி வடிவமானது. மகரந்தக் கேசங்கள் மூன்று இணைந்திருக்கும். இணைக்கும் பகுதி சேர்ந்து கூர்மையாக இருக்கும். செங்குத்தாக வெடிக்கும். கனி ட்ரூப் வகையைச் சேர்ந்தது. வெடியாக்கனி பல வீனப் பட்டதாக இருக்கும். உருண்டைவடிவமானது. சதைப்பற்றுள்ளது, சாறு இருக்கும். விதைகள் மூன்றுகோணங்கள் உடையது. விதையுறைக் கடினமாக இருக்கும். ஒட்டுச்செடிகள் 3 வருடங்களில் காய் விடும், மற்றவை 6 வருடங்கள் கூட ஆகும். இது விதைமூலமும், ஒட்டுக் கட்டு மூலமும் இனப்பெருக்கும் செய்யப் படுகிறது.
மருத்துவப்பயன்கள் -: நெல்லியன் செய்கை, இலை, பட்டை, காய்த பழம் துவர்ப்பியாகச் செயல்படும்பூ குளிர்ச்சியுண்டாக்கி மலத்தை இளக்கும். பழமும் சிறு நீரைப் பெருக்கி, மலக்காரியாகவும், சீதள காரியாகவும் செயல்படும். நெல்லி காயகற்ப மூலிகையில் முக்கியமானது. இதன் பொருட்டே அன்று அதியமான் ஔவைக்கு கொடுத்து சரித்திரத்தில் சான்றாக நிற்கின்றார் இதன்சிறப்பை பின் வரும் சத்துக் களில் விவரம் தெளிவுறுத்துகிறது.
மாவுச் சத்து -14 கி. புரத சத்து -0.4 கி. கொழுப்புச்சத்து - 0.5 கி, பாஸ்பரஸ் - 21 மி.கி. கால்ஷியம் -15 மி.கி. இரும்புச்சத்து - 1 மி.கி. வைட்டமின் பி 1 28 மி.கி. வைட்டமின் சி 720 மி.கி. நியாசின் - 0,4 மி.கி. கலோரிகள் - 60 வேறு எந்த காயகனியிலும் இதிலுள்ள வைட்டமின் 'சி' அளவைப் போல் பெற இயலாது. ஒரு நெல்லிக் காயில் முப்பது ஆரஞ்சுப் பழங்களில் உள்ள வைட்டமின் சி சத்து உள்ளது.
நெல்லிக்காய் சாறு 15 மி.லி. தேன் 15 மி.லி. எலுமிச்சைச்சாறு 15 மி.லி. கலந்து காலை மட்டும் சாப்பிட்டு வர மதுமேகம் முற்றிலும் தீரும். இதன் இலைக்கொழுந்து ஒரு கைப்பிடி அளவிற்று எடுத்து, அரைத்து மோரில் கலந்து சீதக் கழிச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்.
நெல்லிக்காய்ச் சாறு, பொன்னாங்கண்ணிச் சாறு, பால் வகைக்கு அரை லிட்டர், செவ்விளநீர் 2 லிட்டர், நல்லெண்ணெய்ஒன்றரை லிட்டர் கலந்து அதிமதுரம், ஏலம், கோஸ்டம், பூலாங்கழங்கு, கஸ்தூரி மஞ்சள், ஜாதிக்காய், ஜாதிபத்திரி, திருகடுகு, தான்றிக் காய், கடுக்காய், வகைக்கு 15 கிராம்தூள் செய்து கலந்து பதமுறக் காய்ச்சி வடிகட்டி (நெல்லித்தைலம் ) வாரம் 2 முறை தலை முழுகி வர கண்காசம், காமாலை, மாலைக்கண், பொடுகு, முடி உதிர்தல் தீரும்.
2 கிலோ வற்றலை 4 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி இறுத்து அரைக் கிலோ சர்கரை சேர்த்துப் பாகாக்கி அதில்திரிகடுகு வகைக்கு 30 கிராம், கிராம்பு, ஏலம், வெள்ளைக் குங்கிலியம், கற்பூரம், வாயய் விளங்கம், அதிமதுரம், கூகைநீறு, கொத்த மல்லி, சீரகம், ஓமம் வகைக்கு 10 கிராம் பொடித்துப் போட்டுக் கிளறி அரைலிட்டர் நெய் சேர்த்துக் காலை, மாலை கழற்சிக்காய் அளவு சுவைத்து பால் அருந்த மேகசூடு, எலும்பைப் பற்றிய காய்ச்சல்என்புருக்கி, இருமல், ஈழை, காசம், கபம், வாயு, பீ னிசம், பொருமல் அனைத்தும் தீரும். நெல்லி இலையை நீரில் இட்டுக் காய்ச்சி வாய் கொப்பளிக்க வாய்ப் புண் தீரும். வேர்ப் பட்டையைத் தேனில் உரைத்துத் தடவ நாக்குப் புண் குணமாகும். நெல்லி வற்றலும் பச்சைப்பயறும் வகைக்கு 20 கிராம் 1 லிட்டர் நீரிலிட்டு 200 மி.லி. யாகக்காய்ச்சி வடித்து 100 மி.லி. யாக காலை, மாலை சாப்பிட்டு வர தலைசுற்றல், கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கோதிப்பு தீரும். 15 கிராம் நெல்லிக் காயை இடித்து அரை லிட்டர் நீரில் இட்டு 100 மி.லி. யாகக் காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து 40 மி.லி. யாக 3 வேளை 4 நாள் சாப்பிட மிகு பித்தம் தணியும்.
'' சுத்தசுரம் தோலாப் பெரும் வாந்திபித்தசந்தி பாதமிசை பேருங்காண் - மெத்தமணம்நாறு மயர்க்கூந்துன்பின்னே காவும் இனிமை யெனக்கூறுமரு நெல்லியின் வேர்க்கு'' அரு நெல்லிச் சாற்றால் வெள்ளை படுதல் குணமாகும். வாந்தி நிற்கக் கொடுக்கலாம். இதன் வடகத்தை துவையலாக வழங்க உடல் குளிர்ச்சி உண்டாகும். கண் ஒளிபெறும், காமாலை நீங்கும், பித்தம் போகும். மலமிழகும்.


9.அருகம்புல்



அருகு, பதம், தூர்வை, மேகாரி, மூதண்டம் ... என்ன இது, புரியாத பெயர்களின் அணிவகுப்பாக இருக்கிறதே என ஆச்சர்யப்பட வேண்டாம். அருகம்புல்லுக்குத்தான் இத்தனை பெயர்கள்!
புல் வகையைச் சேர்ந்த இந்தச் சிறு செடியின் மருத்துவக் குணங்கள் ஏராளம். குளிர்ச்சியான தன்மையைக்கொண்ட அருகம்புல் இனிப்புச் சுவை உடையது. மருத்துவத்துக்குப் பயன்படுத்தும் அருகம்புல் சுகாதாரமான வாழிடங்களில் இருந்து சேகரிக்கப்படுதல் அவசியம்.
வேரோடுப் பிடுங்கி எடுத்த பசுமையான அருகம்புல் முழுச் செடியையும் தண்ணீரில் நன்கு அலசி சுத்தம் செய்து ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் பத்து மிளகைச் சேர்த்து நன்றாக அரைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் நீருடன் உட்கொண்டு வர ரத்தம் சுத்தமாகும். கண் பார்வையும் தெளிவாகும்.


அருகம்புல் வேரையும், புல்லையும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுத்தம் செய்து நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். அதை நான்கு டம்ளர் தண்ணீரில் போட்டு சிறிதளவு மிளகுத் தூளையும் சேர்த்து நன்கு கொதிக்கவைக்க வேண்டும். நன்கு கொதித்த பின் இறக்கி வடிகட்டிக்கொள்ள வேண்டும். வடிகட்டிய கஷாயத்துடன் தேவைக்கு ஏற்ப பனங்கற்கண்டு சேர்த்து இளஞ்சூடாக தினமும் காலை - மாலை இருவேளை உட்கொண்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.

சுத்தம் செய்த பசுமையான அருகம்புல்லையும், வேரையும் தேவைக்கேற்ப எடுத்துக்கொண்டு, அதனுடன் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பசையாக எடுத்துக்கொள்ள வேண்டும். பசையை உடல் முழுதும் தேய்த்துக்கொண்டு ஒரு மணி நேரத்துக்குப் பிறகு குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து குளித்து வந்தால், உடல் அரிப்பு, படர்தாமரை, சொறி, சிரங்கு மற்றும் புண்களும் குணமாகும். நோய் குணமாகும் வரை அருகம்புல் பசைக் குளியல் அவசியம்.

அருகம்புல்லை வேரோடு எடுத்து சுத்தப்படுத்தி, அரைத்துச் சாறு பிழிந்து, சாறு 20 மி.லி., தண்ணீர் 20 மி.லி. என்று கலந்து அதோடு சிறிது சர்க்கரையும் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு மாதம் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், வயிற்றுப் புண் குணமாகும்.

வேரோடு பிடுங்கி எடுத்த அருகம்புல்லை தண்ணீரில் நன்கு சுத்தப்படுத்தி வெயிலில் உலர்த்த வேண்டும். நன்கு காய்ந்த பின் இடித்துத் தூளாக்கி, சுத்தமான துணியால் சலித்தெடுக்க வேண்டும். இந்தச் சூரணத்தை தினமும் இரு வேளை ஒரு ஸ்பூன் அளவு தண்ணீருடன் சேர்த்து உட்கொண்டுவந்தால் நன்கு சிறுநீர் பிரியும். உடல் பருமனும் குறையும். அருகம்புல் பசையை வெட்டுக்காயங்கள் மீது பூசி வந்தால் விரைவில் குணமாகும்.

10.முசுமுசுக்கை



கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை, சுவர்களிலும், தரைகளிலும் தானாக வளர்ந்திருக்கும். இது நுரையீரல் நோய்கள், சுவாசக் கோளாறுகளை நீக்க வல்லது. சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது. மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது.

அமைதியின்மை போக்கும்.
இக்கீரையை நன்றாக ஆய்ந்து புழுங்கல் அரிசியுடன் சேர்த்து மாவாக அரைத்து தோசை, அப்பம் சுட்டு சாப்பிடலாம். இதனை வழக்கமாக உணவில் சேர்த்துக்கொள்ள நாள்பட்ட நோய்களால் தளர்ந்து போன உடல் பலமடையும், மனதில் அமைதியின்மை, கோபம் ஆகியவற்றையும் சரி செய்யக்கூடியது இந்த முசுமுசுக்கை கீரை. உயர் ரத்த அழுத்த நோயினை இது குணப்படுத்த வல்லது. சளி, இருமல் வரட்டு இருமல், இழுப்பு வலிகள் போன்றவற்றையும் ஒழித்துக் கட்டும்.
ஆஸ்துமா குணமாகும் 

முசுமுசுக்கையை சூரணமாக செய்து உட்கொள்ள நாள்பட்ட எலுப்புருக்கி, ஆஸ்துமா, காசநோய், இளைப்பு நோய், ரத்தசுவாசநோய் போன்றவை குணமடையும்.
முசுமுசுக்கை தைலம்
முசுமுசுக்கையை தைலமாக தயாரித்து வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் மேற்கொள்ள உடல் சூடு தணியும், கண் எரிச்சல் போக்கும். இளநரையை மாற்றும். வழுக்கை ஏற்படுவதை தடுக்கும்.

ஊட்டச்சத்து

புரதம் - இதன் முக்கியத்துவம்


புரதங்கள் அமினோ அமிலங்களினால் ஆனவை. இவை உயிர்வாழ்வினங்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பல வேலைகளை செய்வதற்கு இன்றியமையாத பொருளாகும். பெரும்பாலும் உடலிலுள்ள புரத அளவில் பாதியளவு தசை வடிவில் அமைந்துள்ளன. புரதத்தின் தரமானது உணவில் அமைந்துள்ள அத்தியாவசியமான அமினோ அமிலங்களைப் பொறுத்து அமைகிறது.


புரதத்தின் செயல்பாடுகள்

புரதமானது உடலில் ஏற்படக்கூடிய முக்கிய வேதியியல் மாற்றச் செயல்களுக்கு என்ஸைம் மற்றும் ஹார்மோன் வடிவிலும் தேவைப்படுகிறது. குழந்தை மற்றும் விடலைப் பருவத்தில் உடல் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான ஆதாரப்பொருட்களை புரதங்கள் தருகின்றது. வளர்ந்தவர்களில் தேய்மானம் மற்றும் சேதாரத்தினால் ஏற்படும் இழப்புகளை பராமரிக்க புரதங்கள் உதவியாயிருக்கின்றன.
கர்ப்பகாலம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் தாய்சேய் இருவரின் உடற்திசு வளர்ச்சிக்கும் மற்றும் பால் சுரப்பதற்கும் கூடுதலான புரதம் தேவைப்படுகிறது

உணவில் எடுத்துக்கொள்ள வேண்டிய பரிந்துரைக்கப்பட்ட புரதத்தின் அளவு

இறைச்சியில் உள்ள புரதங்கள் மிகவும் உயர்ரக புரதங்களாகும். அவற்றிலிருந்து உடலுக்கு தேவையான அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் சரியான விகிதாசாரத்தில் கிடைக்கிறது. சைவ உணவு பழக்கமுள்ளவர்களுக்கும் தானியங்கள் மற்றும் முந்திரிப்பருப்பு, நிலக்கடலை போன்ற பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ளும்போது போதுமான புரதங்கள் கிடைக்கின்றது. பால் மற்றும் முட்டையில் நல்ல தரமான புரதங்கள் உள்ளன. பயறு வகைகள், கடலை மற்றும் எண்ணெய் வித்துக்கள், பால் மற்றும் பாலிலிருந்து கிடைக்கும் பொருட்கள், இறைச்சி, மீன் மற்றும் கோழி இறைச்சி போன்றவை புரதம் அதிக அளவில் உள்ள சில பொருட்களாகும். தாவர உணவுகளில், சோயாபீன்ஸில் மிக அதிகளவு புரதம் கிடைக்கின்றது. இவை 40 சதம்வரை புரதங்களை கொண்டவை. 57 கிலோ உடல் எடை கொண்ட 16-18 வயதுடைய ஒரு ஆணுக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் புரதத்தின் அளவு 78 கிராம் ஆகும். அப்படியிருக்க 50 கிலோ எடைகொண்ட அதே வயதை சேர்ந்த பெண்ணிற்கு ஒரு நாளைக்கு 63 கிராம் புரதம் தேவைப்படுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு 65 கிராம் புரதம் தேவைப்படுகிறது. பால் கொடுக்கும் காலங்களில் (குழந்தை பிறந்த 6 மாத காலம்வரை) பெண்களுக்கு ஒரு நாளைக்கு 75 கிராம் புரதம் தேவைப்படும்.


உணவுப் பொருட்கள்                   சாப்பிடக்கூடிய பகுதியில் உள்ள         
                                             புரதத்தின் அளவு (கிராம் / 100 கிராம் /)   

சோயாபீன்ஸ்                                             43.2

கொண்டைக்கடலை, 
உளுந்து, பச்சை பயறு                                  22            
மற்றும் துவரை

நிலக்கடலை, முந்திரி                                  23
மறறும் பாதாம் பருப்பு

மீன்                                                            20

இறைச்சி                                                     22

பசும்பால்                                                    3.2

முட்டை (ஒரு முட்டையில்)                        13.3





Thursday 31 May 2012

வேளாண்மை அல்லது விவசாயம் என்பது உணவு மற்றும் பிற பயன்பாடுகளுக்காக சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான். வீட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் (பயிர்கள்)உற்பத்தியைக் கொண்டு நாகரிகங்களுக்கு வழிவகுத்திட்ட சிறப்பான மானிடவியல் வளர்ச்சி வேளாண்மையாகும். உணவுப் பெருக்கத்தை உருவாக்கிக்கொள்வது அடர்த்தியான மக்கள் தொகை மற்றும் நிலத்தொடர்புச் சமூகங்களை வளர்த்தெடுக்க உதவுகிறது. கால்வாய்களை வெட்டுதல் மற்றும் பல்வேறு வகையிலான நீர்ப்பாசனங்கள் மூலம் பயிர் வளர்ப்பிற்கு ஏற்றாற்போல் நிலத்தின் ஏற்புத்திறனை நீட்டிப்பது உள்ளிட்ட பல்வேறுவிதமான சிறப்புக்கூறுகளுடன் கூடிய உத்திகளோடு விவசாயம் தொடர்புகொண்டிருக்கிறது. பயிரிடக்கூடிய நிலத்தில் பயிர்களை சாகுபடி செய்தல் மற்றும் கால்நடைகளை வளர்த்தல்,மேய்ச்சல் நிலம் அல்லது தரிசுநிலத்தில் கால்நடைகளை மேய்த்தல் ஆகியவை விவசாயத்தின் அடித்தளமாக விளங்குகின்றன. மனித சமூகங்கள் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக வேளாண்மை செய்துவந்துள்ளன. வரலாற்றில், வேளாண்மையின் வளர்ச்சியும் முன்னேற்றமும் வெவ்வேறு தட்பவெப்ப நிலைகள், பண்பாடுகள், தொழில்நுட்பங்கள் போன்றவற்றைச் சார்ந்து மாறுபட்டும் இருந்துள்ளன. எனினும், விலங்குகளையும் தாவரங்களையும் பழக்கப்படுத்தி, பயன்பாட்டுக்குக் கொண்டுவர நிலத்தைப் பண்படுத்துவதற்காக, பல நிலையிலான தொழில்நுட்பங்களையே வேளாண்மை நம்பி இருந்துள்ளது. தாவரங்களைப் பயிர்செய்ய நீர்ப்பாசனம் தேவை. தரிசுப் பயிர்முறையும் உள்ளது. விலங்குகளை வளர்க்க புல்வெளிகள் தேவை. வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழில்நுட்ப வேளாண்மைமுறை மேலோங்கியதால் "ஓரினச் சாகுபடி" (monoculture) பரவலாகியுள்ளது. எனினும், வேளாண்மைத் தொழிலை இயற்கையோடு இசைய நிகழ்த்தும் முறைகளாக "நெடு வேளாண்மை" (permaculture) மற்றும் "உயிரி வேளாண்மை" (organic agriculture) என்பவை இன்று நடைமுறைக்கு வந்துள்ளன. விவசாயத்தைப் பற்றிய ஆய்வு என்பது வேளாண் அறிவியல் எனப்படுகிறது. வேளாண் அறிவியல் சார்ந்த தாவர வளர்ப்பு என்பது தோட்டக்கலை எனப்படுகிறது.

Monday 28 May 2012

சங்க இலக்கியங்கள் தமிழக நிலத்தை, ஐவகையாக வகைப்படுத்தினர். அவை குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல் மற்றும் பாலை என்பனவாகும். மருத நிலத்தை, வேளாண்மைக்கு ஏற்ற நிலமாக்கினர். மண்ணின் இயல்புகளைக் கொண்டு, நிலங்களை மென்புலம், பின்புலம், வன்புலம், உவர்நிலம் என்று வகைப்படுத்திருந்தனர். தமிழ்நாட்டில் ஏறத்தாழ 130 இலட்சம் எக்டேர் பரப்பளவு நிலமுள்ளது. இதில் ஏறத்தாழ 63 இலட்சம் வேளாண்மைக்கு ஏற்ற மண்வளத்தினைப் பெற்றுள்ளது. ஆண்டுக்கு ஏறத்தாழ 100 செ.மீ. மழைப்பொழிகிறது.இம்மழையளவில் ஐந்தில் ஒரு பங்கு நீர், மண்ணால் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீராகிறது. உலக வேளாண்மைக்குரிய அனைத்து மண்வகைகளும், தமிழ் நாட்டிலுள் உள்ளதென்று வேளாண் அறிஞர் உரைக்கின்றனர். தமிழகத்தின் மண்வகைகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். 1.செம்மண் 2.செம்புறை மண் 3.கரிசல் மண் 4.வண்டல் மண்



Tuesday 17 January 2012

குமரிக்கண்டம்

குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் பாண்டியர்களின் ஆட்சிக்கு கீழ் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு. தேவநேயப் பாவாணர் முதலானோர் இந்த குமரிக்கண்டத்தில்தான் மாந்தர்களும் தமிழர்களும் முதன்முதல் தோன்றினர் என எழுதியுள்ளனர்[1] ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய தென் குமரிக்கண்டம் கடல்கோளால் (சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால்) அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின், அறிவியல் முறைப்படி நிறுவப்படாத, கருத்து. பண்டைத்தமிழ் இலக்கிய நூல்களில் கிடைக்கப்பெறும் தகவல்களில் சிலவற்றைக் கீழே காணலாம்:

சிலப்பதிகாரத்தில் "பஃறுளியாறும்", "பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்" "கொடுங்கடல் கொண்டது" பற்றிக் கூறுகின்றது.
அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22)
பாண்டியனை வாழ்த்தும் பொழுது
"செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம் 9)
"தொடியோள் பௌவம்" என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் கொடுக்கும் விரிவான விளக்கத்தில் "தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க." [2]
இரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் கபாடபுரம் என்ற தலைநகரம் முழுகிய பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதை தொல்காப்பிய சிறப்புப் பாயிர வரி, "வட வேங்கடந் தென்குமரி" குறிப்பதாகக் கருதுகின்றனர்.
தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்"
"குமரியம் பெருங்துறை யயிரை மாந்தி" (புறம் 6:67)
"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)
என்னும் குறிப்பு, பழம் பாண்டிய நாட்டை கடல்கொண்டதை குறிக்கின்றது என்பர்.
இறையனார் அகப்பொருள் உரையில் விரிவாக ஆண்ட அரசர்களின் வரிசை, தமிழ் அவையில் இருந்த புலவர்களின் வரிசை முதலியன குறிக்கப்பெற்றுள்ளன. இது போல செய்திகள் தமிழ் இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை.

இத்தென்குமரிக்கண்டத்தின் தலைநகராக தென்மதுரை விளங்கியதாகவும் மேலும் தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்ததென்பதும், அதனை அடுத்து மேலும் இரண்டு சங்கங்கள் இருந்தனவென்பதும் நூற்களின் தகவல்களாகும். மேலும் முதற் கடற்கோளால் குமரிக்கண்டம் என்று கூறப்படும் நிலப்பகுதி அழிவுற்றது என நூற்தகவல்கள் குறிக்கின்றன. இவ்வாறு மொத்தம் நான்கு கடல்கோள்கள் நிகழ்ந்ததாகக் கருதுகின்றனர். கிடைக்கப்பெற்ற நூற்தகவல்களின் மூலம் உறுதியாகக் கூறமுடியாத அளவிற்குக் குமரிக்கண்டம் வெறும் கற்பனைக் கண்டமென்பது பலருடைய கருத்து. இக்குறிப்புகளில் உள்ள உண்மை இன்னும் அறிவியல் முறைப்படி நிறுவப்படவோ, மறுக்கப்படவோ இல்லை. இறையனார் அகப்பொருள் உரையில் கூறியுள்ளது உண்மையாக இருப்பின் தமிழர்களின் இலக்கிய காலம் சுமார் கி.மு 10,500 ஆண்டுகள் வரை செல்லும். இதற்கு வலுவான பிற உறுதிகோள்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

.......கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து எடுக்கபட்டது

Monday 16 January 2012

தமிழ்

தமிழ் மொழி தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ்,ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும். திராவிடமொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது